கருவறையின் இருளகற்றிக் கதிராய் வந்தாய்! கண்மணியே எனதாதித் தேவதை நீயே! உருவாகும் என்சுவாச வேருன் பாலே! உயிர்ப்பெற்றுத் தழைக்கின்ற விழுது நானே! ஒருநூறு கவிதையினை யாத்துப் பார்த்தேன்! உன்னன்பின் துளிசொல்ல மொழியு மில்லை! பருவங்கள் கடந்தாலும் இதயம் தங்கும்! பத்துமாதச் சுமையல்ல வாழ்நாள் காப்பாய்! விழும்போது உனக்கன்றோ வலித்து நின்றது! வெல்லும்போது உனக்கன்றோ இனித்து நின்றது! அழுங்காப்புப் புவியென்னைத் தள்ளும் போது அணைப்பொன்றே இமயத்தின் துணிவைத் தந்தது! ஊட்டியது வெறும்சோறாய் இருந்த தில்லை! உயிரூட்டும் நம்பிக்கைப் பாலாய் நின்றது! காட்டியது வெறும்நீதி கதையு மில்லை! கண்டெடுத்த வாழ்வியலின் சார மன்றோ! எவ்விடமும் இறையிருக்க இயலா தென்றே ஈன்றவளைப் படைத்தானென் றுரைப்பார் மண்ணில்! செவ்விதழ்நீ இருப்பதனால் கடவு ளுக்கே சிறப்புமிக்கப் பெருமையென நானே சொல்வேன்! அவ்விடையை உலகுணரச் செய்த தாயே! அடிபணிந்து நன்றியினை நவில்கின் றேனே! எவ்வுயிரும் எனைவியக்கச் செய்தாய் நீயே! என்னுயிரில் வரைந்திட்ட ஓவியம் நீயே! ~ தனேசு பாலகிருட்டிணன் @தினகரன்
மங்களத்தின் கணவன் மறைந்து சரியாக ஓராண்டு முடிந்துவிட்டது. அந்த வீட்டின் சுவர்கள் இன்னும் அமைதியையே சுவாசித்துக் கொண்டிருந்தன. உறவினர்கள் கூடி சடங்குகளை முடித்துவிட்டு, "பாவம், மங்களத்திற்கு இனி என்ன இருக்கு? வெள்ளைச் சேலையும் நாலு செவுறும்தான் மிச்சம்" என்று இரக்கப்பட்டுப் பேசிவிட்டுப் பிரிந்தனர். மங்களத்திற்கு வயது நாற்பத்தைந்துதான். ஆனால், சமூகம் அவளுக்கு எழுதாவிட்டாலும், அவளது கண்கள் முன்னால் ஒரு பெரிய 'முற்றுப்புள்ளி' வைக்கப்பட்டிருந்தது. ஒரு மாலை நேரத்தில், மங்களத்தின் மகள் கவிதா தன் தாயின் அறைக்குள் நுழைந்தாள். மங்களம் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். "அம்மா, இதோ பார்," என்று ஒரு விண்ணப்பப் படிவத்தை நீட்டினாள் கவிதா. அது ஒரு தையல் மற்றும் ஆடை வடிவமைப்புக் கலைக்கான (Fashion Designing) பட்டயப் படிப்புக்கான விண்ணப்பம். "இது எனக்கெதுக்கு கவிதா? எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. எனக்கும் அப்படித்தான் தோணுது," என்றாள் மங்களம் மெல்லிய குரலில். கவிதா தன் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். "அம்மா, ...